
வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..
தொலைபேசி உரையாடல் -1
நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?
எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?
நான்:அடலேறு பேசறங்க…
எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?
நான்: இல்லங்க என் பேரு அடலேறு..
எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)
அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?
நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல கேஸ் தீந்துருச்சு அதான் போன் பன்ன
எதிர்முனை:முன்னாடி அடையாறுனு சொன்னீங்க..
நான்:இல்லங்க அது எம் பேரு..
எதிர்முனை:அடையாறுனு பேரா ?
நான்:இல்லங்க அடலேறு தான் என் பேரு.
எதிர்முனை:சரி அடலொரு வீட்டு அட்ரெஸ் சொல்லுஙக…
என் பெயரை தப்பாக சொன்னால் கூட பரவாயில்லை அவர் ஒரு பெயர் படுகொலையை அரங்கேற்றி கொண்டிருந்தார்.
இதுக்கு மேல என் பெயரை ஒருவர் கொலை செய்வது பொருக்க முடியாமல் ஏதும் சொல்லாமலேயே ரிசீவரை வைத்து விட்டேன்.
எதிர்முனை:அலோவ் அலோவ் அலோவ்வ்வ்வ்வ்
தொலைபேசி உரையாடல்-2
நான்: வணக்கம் , புத்தககடையா?
எதிர்முனை:ஆமா சொல்லுங்க சார்,
நான்:(குறிப்பிட்ட புத்தகதின் பெயரை சொல்லி ) வந்துருச்சுங்களா?
எ.மு: இல்ல சார் இன்னும் வர்ல ,வந்தா கூப்பிட்டு சொல்லறோம் , உஙக பேரு, செல் போன் நம்பர் சொல்லுங்க..
(இந்த முறையும் எதாவது ஏழரை நடக்கும் என எண்ணியவாறே)
என் பெயர் அடலேறு, அலைபேசி எண் வந்து..
என்ன சொன்னீங்க அடலாறா? இல்லங்க அடலேறு .. ஓ அடவாரா சரி செல் போன் நம்பர் சொல்லுங்க..
இல்ல சார் என் பேரு அடலேறு..
அது தான் அடவாரு செல் போன் நம்பர் சொல்லுங்க..
வழக்கம் போல பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாதலால் போல இந்த முறையும் போன் துண்டிப்பு.
எதிர் முனை: ஹலோ அடவாறு ,அடவாறு லைன்ல இருக்கீங்களா?
தொலைபேசி உரையாடல்-3
நான்: ஹலோ, டிராவல்ஸ் ஆபீஸா?
எ.மு: ஆமா சார் சொல்லுங்க..
நான்:சார் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சிக்கு ஒரு டிக்கெட் வேணும்
எ.மு:இருங்க பாத்து சொல்ற… ஒரே சீட் தா இருக்கு சார்
நான்:நானும் ஒருத்தன் தான் சார் இருக்க
எ.மு:சரி சார் , உங்க பேரு , போன் நம்பர் சொல்லுங்க.
நான்:(சனி இன்னைக்கு பொட்டு வெச்சு , பூவும் வெச்சு விளையாடாம போகாதே என நினைத்தவாரே)
பேரு அடலேறு, அலைபேசி எண்.^&*^(*&^*(
எ.மு:சரி சார் , புக் பண்ணிட்ட 7 மணிக்குள்ள வநது டிக்கெட் வாங்கிகோங்க..
(ஆச்சர்யம் கொண்டவனாய் முதல் முறையே நம்ம பெயர சரியா எழுதீட்டாரே ! இவன் ஒரு மிக பெரிய அறிவாளி என எண்ணியபடியே)
சார் பேர சரியா எழுத்தீட்டீங்களா?
சரியா எழுதீட்ட சார், தினமும் எவ்வளோ பேரு போன் பண்றாங்க, அதெல்லாம் கரெக்டா எழுதீட்ட ”கடலாறு தான சொன்னீங்க”னு
சொன்னானே பாக்கனும்…, இடியே என் தலை மீது விழுந்தது
தொலைபேசி உரையாடல்-4
பெண்: நான் விமலா பேசர , அரவிந்த் தான பேசறது
நான் : இல்லங்க ராங் கால்.
பெண்:இல்ல அரவிந்த் இந்த நம்பர் தான் குடுத்தாரு
நான் :அப்படினா அரவிந்த்கிட்டயே கேளுங்க
பெண்: யூ ஆர் ச்சீட்டிங் ஐ நோ யூ ஆர் அரவிந்த்.
நான் :செத்துப்போன பாட்டி மேல சத்தியமா நான் அரவிந்த் இல்ல நான் அடலேறு.
பெண்:என்ன அடில ஆறா.. வாட் யூ மீன் ?
நான் : இந்த முறை சிக்க கூடாதுனு நினைத்தவாரே பொறுமையாக அது இல்லங்க விமலா “ என் பேர் அட’லேறு என அழுத்தமாக சொன்னேன்.
பெண்: என்னங்க வெரும் ”லேரு”னு ஒரு பேரா, ஆமா ஏன் எப்பவும் அட அட னு சொல்றீங்க,
நான் : இல்லங்க அட அட னு சொல்லுல, அது தான் என் பேரு..
பெண்: என்னங்க ’அட’ னு ஒரு பேரா முன்னாடி ’லேறு’ னு தான சொன்னீங்க..
நான் : இல்லங்க ’அட’ வும் ’லேறு’ ம் சேர்த்தி சொல்லுங்க அது தான் என் பேரு
பெண்:ஓ அடலாறா சரிசரி ..
இவளை திருத்த முடியாது என முடிவு செய்து .. விமலா ஆள விடுங்க என் பேரு எனக்கே தெரியாது போன வைங்க என சொல்லி இனைப்பை துண்டித்தேன் .
வீனா போனவள பெத்து விமலானு பேரு வெச்சாங்களானு கேட்க தோன்றியது வேற .