நகரும் தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு.

முன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க‌ என்றான். முன் அறையிலேயே செல்லம்மாள் பாரதிதான் வரவேற்றார். புகைப்படம் எடுக்கும் போது சிரிக்ககூடாது என்பதை கொள்கையாக கொண்டிருப்பார் போலும். அவரின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையில் சொன்ன வரிகள் தான் நியாபத்திற்கு வந்தது

“” இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்…”"

செல்லம்மாள் பாரதியின் கடிதத்தை படித்த போது ஏற்பட்ட மனவீச்சை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.

வரலாற்றூப்பெண்.அமைதியான முகம்..,  அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத போது கிடைத்த அரிசிகளை குருவிகளுக்கு போட்டு விட்டு ” காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்று  பாடுவ‌தை எந்த‌ பெண்ணாலும் ச‌கித்திருக்க‌முடியாது எத்தனை கோவ‌ம் வந்திருக்கும்.இவரால் கோபப்படவே முடியாது என்பது போலத்தான் முகம்.

ப‌க்க‌த்தில் இன்னொரு ப‌ட‌த்தில் பார‌தியார் செல்ல‌ம்மாளுட‌ன் இருந்தார். அதிலும் செல்ல‌ம்மாள் சிரிக்க‌வேயில்லை.இவ‌ர் சிரிக்காத‌து  உறுத்தலாக இருந்தது. க‌டைசி வ‌ரை வ‌றுமையும் , துன்ப‌த்தையும் ம‌ட்டுமே அனுப‌வித்த‌தால் புன்ன‌கையே இழந்திருப்பார் போலும்.

1901 ம் ஆண்டு த‌ன்னுடைய‌ 19வ‌து வ‌ய‌தில் செல்ல‌ம்மாளுக்கு எழுதிய‌ க‌டிதத்தில், எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம் என்று ஆர‌ம்பிப்பார் பார‌தி. பார‌தியை பார்த்து க‌ண்சிமிட்டி சிரித்துக்கொண்டேன். எட்டாம் வ‌குப்பில் ப‌டித்த பாரதிக்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. இப்போது நான் பார்க்கும் பார‌தி ஆளுமை, என‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்.

அடுத்த‌ அறை ” பார‌தி பிற‌ந்த‌ இட‌ம் ” அவ‌ர் ஜ‌னித்த‌ இட‌த்தில் ஒரு சிலை இருந்தது.சிலையை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியின் வெளிச்ச‌ம் த‌ரையில் ப‌ர‌வியிருந்தது.

ஆண்டுக‌ள் சென்ற‌ பின் உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ அவ‌ரின் பிற‌ப்பை அவ‌ர் பிற‌ந்த‌ இட‌த்தில் நின்று நினைத்துப்பார்பார்க‌ள் என்று பார‌திக்கு நிச்ச‌ய‌ம் தெரிந்திருக்காது . எட்ட‌ய‌புர‌த்தில் சாதார‌ண‌மாக‌ பிற‌ந்த‌வ‌ர் ம‌றையும் போது சாதார‌ண‌மான‌வ‌ராக‌ இல்லை. அவ‌ரின் பிற‌ப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன். அருகிலேயே அவ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வேலும் குத்தீட்டியும் இருந்தது, அதைவிட‌ வலிமையானதுஅவ‌ர் ச‌ட்டையில் குத்தியிருக்கும் பேனா என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன். ப‌ழ‌மொழிக‌ளை நிஜ‌த்துட‌ன் உள்வாங்கிக்கொள்வ‌து என‌க்கு மிக‌ அரிதாக‌வே  நடந்திருக்கிறது.

தேடிச்சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுளன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

( சொல்லில‌ட‌க்க‌முடியாத அகச்‌சீற்ற‌த்தை இந்த‌ப்பாட‌ல் எப்போதும் என‌க்கு த‌ருகிற‌து . நரை கூடிக் கிழப்பருவ எய்த‌மாட்டேன் என்ற‌ இந்த‌ க‌விதையை எழுதினதால் தான் நரை கூடுவதற்கு முன்னமே நம்மை விட்டுச்சென்றாரோ என்னமோ )

ப‌க்க‌த்தில் 1920 ‍ல் பார‌தி சென்னையில் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் ஒன்று இருந்தது. அதில் அழ‌காக‌ முண்டாசு க‌ட்டி ப‌ட‌ங்க‌ளில் நாம் பார்க்கும் பார‌தி போல‌ இருந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கையின் பின்பக்கம் சற்று சரிவாக வெளியே தெரிந்தது.அதை சுற்றி ம‌ன‌ம் ப‌ல‌ சிந்த‌னைக‌ளை இழுத்துக்கொண்ட‌து. அவ‌ச‌ர‌மாக‌ வ‌ந்து உட்கார்ந்து கொண்ட‌தால் தான் ச‌ரிசெய்ய‌ வேண்டாம் என‌ நினைத்து புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டாரா, இல்லை அந்த‌ நாற்காலியின் ஏதோ ஒரு கால் ச‌ரியாக‌ வேலைசெய்ய‌வில்லையா என‌ இடியாப்ப‌ச்சிக்க‌லாக‌ நினைவுக‌ள் ப‌ய‌ண‌ப்ப‌ட்டுக்கொண்டே இருந்தது. நொதிக்கும் சிந்த‌னையை அமைதிப்படுத்திய‌ பிற‌கு தான் உண‌ர்ந்தேன் எட்ட‌ய‌புர‌ம் என்ற‌ பெய‌ர் ப‌ல‌கையை பார்த்த‌ முத‌ல் இப்ப‌டி தான் இருக்கிறேன் என்று. ச‌ம‌ நிலை ப‌டுத்திக்கொண்டேன்.

அடுத்து அவ‌ரின் குடும்ப‌ப்ப‌ட‌ம், அதிக‌ நேர‌ம் பார்த்த‌து அந்த‌ ப‌ட‌மாக‌த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.க‌ம்பீர‌மான‌ அப்பாவாக‌, காத‌ல்மிகு க‌ண‌வ‌ணாக‌ செல்ல‌ம்மாளில் தோளில் கை வைத்துக்கொண்டு எடுக்க‌ப்ப‌ட்ட‌து அந்த‌ப்ப‌ட‌ம்.


வ‌ல‌து புற‌மாக‌ வீட்டிற்குள்ளேயே கிண‌று. இங்கே தான் செல்லம்மாளின் குர‌லுக்கேற்ப‌ பார‌தி த‌ண்ணீர் இறைத்துக்கொடுத்திருப்பார் என்ற‌ நினைப்பே அலாதியாய் இருந்தது. இந்த‌ கிண‌ற்ற‌டியில் எத்த‌னை பாட்டெழுதியிருப்பார் என்ப‌த‌ற்கு சான்றுக‌ள் இல்லை. என்னை பொறுத்த‌வ‌ரை குறைந்த‌ப‌ட்ச‌ம் ப‌த்து பாட‌ல்க‌ள்.

மீண்டும் அதே அறை, பார‌தியின் தொட‌ர்பு கொண்டவர்களின் புகைப்ப‌ட‌ங்க‌ள், முத‌லாவ‌து ரா. க‌ன‌க‌லிங்க‌ம் ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று பாடிய‌ மகாக‌வியால் பூணுல் அணுவிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர். உய‌ர் சாதியை த‌விர்த்து முத‌ல் முறையாக‌ த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் பூணூல் அணிந்த‌து இவ‌ராக‌த்தான் இருக்கும். பார‌தி வெறும் வார்த்தைக‌ளால் ஜ‌ல்லிய‌டித்துப்போக‌வில்லை என்ப‌த‌ற்கு க‌ன‌க‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளே முத‌ல் சாட்சி.

அடுத்து சுதேச‌ கீத‌ங்க‌ள் வெளியிட்ட‌ கிருஷ்ண‌சாமி ஐய‌ர், அவ‌ரை அடுத்து புதுவையில் அறிமுக‌மாகி சென்னையில் பார‌தியை காப்பாற்றிய‌ குவ‌ளை க‌ண்ண‌ன்., சுதேச‌ ப‌க்தி உப‌தேச‌ம் செய்த‌ நிவேதிதா தேவியார். இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் பாரதி என்ற‌ ஆளுமையை அவ‌ர் வாழ்ந்த‌ ச‌ம‌ கால‌த்தில் க‌ண்டுகொண்ட‌வ‌ர்க‌ள்.

அடுத்து அவ‌ர் ப‌டித்த‌ இந்து க‌ல்லூரி, சென்னையில் வாழ்ந்த‌ வீடு, அவ‌ரின் புத‌ல்விக‌ள், அவர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ள். இதில் ப‌ர‌லி சு நெல்லைய‌ப்ப‌ருக்கு எழுதிய‌ க‌டித‌த்தில் ” த‌மிழ‌ச்சியை காட்டிலும் ம‌ற்றொரு ஜாதிக்காரி அழ‌காயிருப்ப‌தை க‌ண்டால் என் ம‌ன‌து  புண்ப‌டுகிற‌து என்று எழுதியிருக்கிறார்.

இதை விட‌ த‌மிழ‌ச்சிக‌ளை யாரும் காதலித்துவிட‌ முடியாது என்றே நினைக்கிறேன். இந்த இரண்டு வரிகள் மிகப்பெரும் நினைவுச்சுழலை ஆரம்பித்துவைத்தன‌‌. தமிழனும் , தமிழச்சியும் தான் எல்லாவற்றிலும் முத‌லிட‌த்தில் இருக்க‌ வேண்டும் என்பதை பாரதியார் பெரிதும் விரும்பியிருக்கிறார்.

மீப்பெரும் ஆளுமைக‌ள் அவ‌ர்க‌ளின் புகைப்ப‌டங்களின் நிழ‌ல் பிம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். பாரதி நிஜத்திலும் கவிதையிலும் ஒருகால‌த்திலும் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொள்ளாத‌வ‌ர். பைத்திய‌க்கார‌ன் என்று சொன்ன‌வ‌ரின் வாரிசுக‌ளுக்கு இன்று அவ‌ர் மகாக‌வி.

க‌விதைக்காக‌ அவ‌ர் இழ‌ந்தவைக‌ளின் கூட்டுக்தொகை மிக அட‌ர்த்தியான‌து. இருக்கும் வ‌ரை வார்த்தைக‌ளால் விளையாடிக்கொண்டிருந்த‌வ‌ர் இற‌ந்த‌ பிற‌கு அவரின் வார்த்தைக‌ள் விளையாடிக்கொண்டிருக்கிற‌து.

நேரமாகிவிட்டதாக அண்ணன் சொன்னார் . கிள‌ம்புவ‌த‌ற்கு த‌யாராக‌ சப்பாத்துகள் அணிவதற்கு முதல் அறைக்கு வந்தேன். முதலில் பார்த்த அதே படத்தில் இப்போதும் செல்ல‌ம்மாள்  சிரிக்க‌வேயில்லை. அவ‌ரின் சோக‌ம் ப‌டிந்த‌ முக‌ம் என்ன‌வோ செய்த‌து. நிராகரிக்கப்பட்ட‌  கவிஞனுடைய‌ ம‌னைவிக‌ளின் மொத்த‌ பிம்ப‌ம் அவ‌ள்.

“யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்” என்ற‌  துன்பத்தின் மீப்பெரும் வரிகளை செல்லமாள் வ‌லிக‌ளுட‌ன் தான் சொல்லியிருக்கிறார். அவ‌ரின் சிரிக்காத‌‌ முக‌ம் தீர்க்க‌முடியாத‌ ர‌ண‌மாய் உறுத்த‌த்தொட‌ங்கிய‌து. ச‌ட்டென‌ கிள‌ம்பி வெளியேறினேன்.

 -0O0-

பின் இணைப்பு :

என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

( சின்னஞ்சிறுகிளியே செல்லம்மா பாடல் கேட்க வேண்டும் போல உள்ளது )

பின் இணைப்பு படங்கள் :

கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக‌
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுக‌ளில் இருந்து
அவ‌ளை பிரித்து
காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் த‌ண்ட‌னை
நிறையேற‌ தொட‌ங்கிய‌
காலையில் விழித்தெழுந்தேன்
அவ‌ள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேலே சுட்டவும்

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லவும்

என் மழையானவள் நீ

Posted: நவம்பர் 14, 2011 in அடலேறு

மெல்ல தொடங்கி
அடித்துப்பெய்கிறது
மழை
அடித்து பெய்து
மெல்ல அடங்குகிறதுன்
ஊட‌ல்

****

நீயும் நனைகிறாய்
என்னையும் நனைக்கிறாய்

****

அடை ம‌ழை என்றாலே
 இரவுப்பேருந்தில்
நீ த‌ந்த‌ 164 முத்த‌ங்க‌ளை தான்
நினைத்துக்கொள்கிறேன்

****

ம‌ழைக்கு வேறு என்ன‌
பெருமை இருந்துவிட‌ப்போகிற‌து
உன்னை ந‌னைத்த‌து த‌விர‌

****

ம‌ழையில் ந‌னைந்து விட்டு
கைத‌ட்டி சிரிக்கிறாய்
உன்னை ந‌னைத்து விட்டு
பெய்யென‌ பெய்கிற‌து பெரும‌ழை

****

அந்த‌ ம‌ழை நாளில்
குடைக்க‌டியில் இட்ட‌
முத்த‌த்தில் வ‌டிந்து
போன‌வ‌ன் நான்

****

வாச‌ல் தெளித்து
கோல‌ம் போடாதே
வ‌ந்துவிடபோகிற‌து ம‌ழை

****

தேனீர் அத‌ன்
ஆக‌ச்சிற‌ந்த‌ சுவையை
ம‌ழை நாளில் அடை‌கிற‌து.
நீயுன் ஆக‌ச்சிற‌ந்த
அழ‌கை ம‌ழைநாளில்
அடைகிறாய்

****

என்பெய‌ர‌ற்ற‌ ஒரு பெய‌ரை
அந்த‌ ம‌ழை நாளில்
தான் முத‌ன் முறை
கூப்பிட்டாய்

****

ம‌ழை நாளில் தேனீரின்
க‌த‌க‌த‌ப்பு
பின் க‌ழுத்தில் நீயிடும்
எச்சில் முத்த‌ம்

****

உன் பிற‌ந்த‌ நாள் காலை
குதுக‌ல‌த்துட‌ன்
பொழிய‌த்தொட‌ங்கிய‌து
அடை ம‌ழை

****

க‌விதைக‌ளெல்லாம் போதும்
காத‌ல் செய்
பெய்ய‌ட்டும் பெரும‌ழை

****

நான் தொடாத‌ இட‌ங்க‌ளை
ம‌ழை ந‌னைத்த‌தால்
தொட‌ங்குகிற‌து
ம‌ழைக்கும் என‌க்குமான ச‌ண்டை

****

உட‌லெங்கும்
படர்ந்தென்னை சில்லிட வைக்கும்
என் மழையானவள் நீ

****

நீங்கள் எல்லாரும் இவ்வளவு விருப்பப்படும் ஒரு டெக்னாலஜியை நிறைவேற்றுவதைவிட எனக்கு வேறு என்ன வேலை இருந்து விட போகிறது?
அது என் காலத்துக்குமான‌ கடமை -‍ ஸ்டீவ் ஜாப்ஸ்


Apple has lost a visionary and creative Genius, And the world has lost an amazing human being.

When Can I See you Again in New Product Release with Black T-Shirt, I Will Badly Miss You STEVE

கல்லூரியில்
முதல் நாள் வகுப்பில்
கிரங்கடிக்கும்
பார்வையுடன்
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

மென் இதய‌ம் கிழித்து
குருதி புசித்து
உள்ள‌ம் தொடும்
உன் பார்வை

–oO0–

எப்ப‌டி த‌ய‌க்க‌மில்லாம‌ல்
கைகுலுக்கி
பெய‌ர் கேட்டாய்
போடா! நான் தூங்கவேயில்லை

–oO0–

கரும்பலகை எழுத்துக்களை
அழிக்கும் ஒவ்வொரு முறையும்
அழித்துக்கொண்டுருந்தாய்
என் தயக்கத்தை

–oO0–

எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய்
இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய்
என்னையே மெதுவாய்
இழ‌க்க‌ வைத்தாய்

–oO0–

உன்னுட‌ன் பேசுகையில்
எதேச்சையாக‌ காத‌லை
சொல்லிவிடுவேன் என்று தான்
பேசுவ‌தேயில்லை

–oO0–

ஒரு ப‌க்க‌ம் த‌லை சாய்த்து
குட் மார்னிங் சொல்லும் போது
ஹைய்யோ!!
க‌ட்டிப்பிடித்து கொள்ள‌லாம்
போல‌ தோன்றும்

–oO0–

ச‌த்திய‌மிட்டு சொல்கிறேன்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
க‌ருக்கென்று நெஞ்சுக்குழிக்குள்
ஏதோ ஒன்று இழுக்கிற‌து

–oO0–

உன்பெய‌ரை
யார் அழைத்தாலும்
திரும்பிப்பார்ப்ப‌தை
த‌விர்க்க‌முடிய‌வில்லை
ஏன்?

–oO0–

புத‌ன்கிழ‌மை லேப்புக்கு
அணிந்து வ‌ரும் முழுநீள‌
வெள்ளை ச‌ட்டையில்
கொள்ளை அழ‌குடா நீ

–oO0–

தின‌மும் ஏழு ம‌ணி
லேண்ட் லைக்கு
மிஸ்டு கால் கொடுப்ப‌து
நான் தான்

–oO0–

முத‌ன் முறையாக‌
நீ க‌ல்லூரி வ‌ராத‌
அன்று தான்
தெரிந்து கொண்டேன்
வ‌குப்ப‌றை எத்த‌னை
அந்நிய‌ம் என்று

–oO0–

காய்ச்ச‌ல் என்ப‌து
இத்த‌னை கொடிய‌து என்று
உன‌க்கு வ‌ந்த‌ பின் தான்
உண‌ர்ந்தேன்

–oO0–

நேரில் சொன்னால்
அழுது விடுவேன்
என்று தான்
போனில் சொன்னேன் காத‌லை

–oO0–

நிராக‌ரிப்பை
நாசூக்காய் உண‌ர்த்திய‌தால்
நீ மெதுன‌ன்

–oO0–

உன் என்றைக்குமான
தோழி நான்
என் என்றைக்குமான‌
காத‌ல‌ன் நீ

–oO0–

நிராக‌ரிப்பின் உச்ச‌ம்
உன்
மெள‌ன‌ம்

–oO0–

இப்போதெல்லாம்
என்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
ஏன்?

–oO0–

ஹார்மோன் பீய்ச்சிய‌டித்து
முதுகுத்த‌ண்டில்
மின‌சார‌ம் பாய்ந்து
த‌ண்டுவ‌ட‌ம் வ‌ழியே
மூளையை தாக்கிய‌து
நீ காத‌லை சொன்ன‌ போது

–oO0–

நெற்றி முத்த‌மிட்டு
என்னை ஏற்றுகொண்ட‌
அன்று தான்
ஜன‌ன‌மானேன்

–oO0–

உன் சகர்தர்மிணி நான்
என் சகலமும்
நீ

–oO0–

முத‌ன் செம‌ஸ்ட‌ரிலேயே
எப்ப‌டி காத‌லை
சொன்னாய் என்றாய்
முத‌ல் நாளே
சொல்லியிருப்பேன்
நீ சிறுவ‌ன்

–oO0–

தேர்வு அறையில்
ப‌க்க‌த்தில் உட்காராதே
ம‌ற‌ந்து தொலைக்கிற‌து
அனைத்தும்
–oO0–
நீ ப‌தித்த‌‌ முத‌ல் முத்த‌ம்
தான் கிள‌றிவிட்ட‌து
என் பெண்மையை
–oO0–
கையை பிடித்துக்கொண்டு
அனாய‌ச‌மாக‌ பேசுகிறாய் நீ
கிட‌ந்து த‌விக்கிறேன் நான்
–oO0–

உன்னைக்காட்டாத‌
ச‌னி, ஞாயிறுக‌ளை
அற‌வே
வெறுக்கிறேன்

–oO0–

இடைஇழுத்து
முத்த‌மிடும் போது
எல்லை தாண்ட‌
சொல்லும்
உன் மூச்சுக்காற்று

–oO0–

வில‌க்கான‌ நாட்க‌ளில்
ம‌டிகிட‌த்தி
த‌லை கோகி
க‌ர‌ம் ப‌ற்றி
கால் விர‌ல்
சொடுக்கெடுக்கும் நீ
என் தாயுமான‌வ‌ன்

–oO0–

கன்னத்தின்
நேரெதிர் த‌ட‌வ‌
நேற்று ம‌ழித்த‌ தாடி
உலை வைக்கும்
என் பெண்மைக்கு

–oO0–

உள் நுழைந்து
உயிர் புசித்து
சந்தோஷப்படுத்தியே
சாகடிப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன்னை
காதலித்திருக்கவே மாட்டேன்

–oO0–

கோடு போட்ட‌
ஆர‌ஞ்சு ச‌ட்டை
காட்டும் உன்னை
திமிராக‌
–oO0–
நீயும் நானும்
ப‌கிர்ந்துண்ண‌ தொட‌ங்கிய‌பின்
ச‌மைக்க‌ விடுவ‌தில்லை
அம்மாவை
–oO0–
எப்ப‌டி
க‌ண்டுபிடித்தாய்
நானும் நானும்
ஒன்றில்லையென
உன்னுட‌ன் இருக்கும்
த‌ருண‌ங்க‌ளில்
–oO0–

வாக‌ன‌ ச‌த்த‌மும்
உன் மென் வாச‌மும்
அறிந்து வைத்திருக்கிறேன்

–oO0–

நீ ஈர‌க்கை துடைத்த‌
துப்பட்டா
த‌லைய‌னையென‌க்கு
இர‌வில்

–oO0–

யாரும‌ற்ற‌ வ‌குப்பில்
த‌னியாய் உன்னிட‌ம்
மாட்டிக்கொள்வ‌து
அவ‌ஸ்தை பேர‌வ‌ஸ்தை

–oO0–

வகுப்பறையில் நான்
இல்லாததை தேடும்
உன் கண்கள்
எனக்கு பிடித்த உறுப்பு

–oO0–

உன்னிட‌ம்
பொய்யாய் கூட‌
கோபப்ப‌ட‌ முடிய‌வில்லை
அப்ப‌டி கெடுத்து வைத்திருக்கிறாய்

–oO0–

இய‌ல்பாக‌ பேசி விடுகிறாய்
எதோ ஒன்றை.,
நினைத்து நினைத்து
நீர்த்துப் போகிற‌து இர‌வு

–oO0–

அதிகாலையில்
அருகில் நீ இருப்ப‌தாய்
நினைத்துக்கொள்ளும்
க‌ற்ப‌னைக‌ளின்
வ‌சீக‌ர‌ம்
வ‌ன் ஸ்ப‌ரிச‌ம்

–oO0–

எப்போதும் என்னையே
நினைத்துக்கொண்டிருப்பாயா
என்று கேட்கிறாய்
எப்போதும்
சுவாசித்துகொண்டே
இருப்பாயா என்று
கேட்ப‌து போல‌
இருக்கிற‌து
செல்ல‌ ம‌டைய‌னே

–oO0–

ஆணாதிக்க‌ம் பிடிக்க‌த்தான்
செய்கிற‌து
அதிகார‌த்தொனியில்
முத்த‌ம் வேண்டும் என்ப‌து

–oO0–

ம‌ற்ற‌ பெண்க‌ளுட‌ன்
பேசும்போதெல்லாம்
நான் கோப‌ப்ப‌டுவ‌தே இல்லை
நான் ர‌சித்த‌ உன் பேச்சை
அவ‌ர்க‌ளும் கேட்க‌ட்டும்.
பேச்சை ம‌ட்டும்

–oO0–

த‌ட்ட‌ச்சு ப‌ல‌கையில்
ஊர்ந்து செல்லும் உன்
விர‌ல்க‌ளை பார்க்க‌
ஆசையாயிருக்கும்
நினைத்துப்பார்கவே
வெட்க‌மாய் இருக்கிற‌து
ச்சீ போடா

–oO0–

க‌ல்லூரியின்
இர‌ண்டாம் வ‌ருட‌
முடிவு நம்மை
ஒன்றாகிப் போன‌து

–oO0–

வ‌ளாக‌த்தேர்வுக்கான‌
பேருந்து ப‌ய‌ண‌த்திலுன்
கரம் பிடித்து
தோள் சாய்த்து
நானுற‌ங்கும் போது
புகுத்திக் கொண்டேன்
உன் க‌த‌க‌த‌ப்பை

–oO0–

நீ அடிக்கடி மீசை
ம‌ழிப்ப‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை
காதில் சொன்ன‌து
இர‌ண்டு நாள் தூக்க‌ம் கெடுத்த‌து

–oO0–

வ‌குப்ப‌றை மேசையில்
க‌ருப்புமை கொண்டு
என்பேரெழுதும் நீ
காதல்‌ அர‌க்க‌ன்

–oO0–

உன‌க்கான‌ அசைமென்ட்
எழுதும் பேப்ப‌ர்க‌ளில்
மூன்றாவ‌து வ‌ரியில்
உல‌ர்ந்து போன‌
என் முத்த‌ங்க‌ள்
இருக்கும்

–oO0–

க‌டைசி செம‌ஸ்ட‌ர்
நாட்க‌ளை
என் ஆயுசுக்கும்
நீட்டிக்க‌ச்சொல்

–oO0–

ச‌ட்டென கோப‌ம்
பட்டுத்தெரிக்கும்
என‌க்கு.,நீயில்லாம‌ல்
இத்த‌னை நீண்ட‌ அன்பு
சாத்திய‌மில்லை

–oO0–

கல்லூரியில்
க‌டைசி நாள் வகுப்பு
முடிந்து வெளியேரும் போது
க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

புகைப்படம்

Posted: ஜனவரி 22, 2011 in கவிதை, தமிழ், வாழ்க்கை
குறிச்சொற்கள்:,

ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை  பார்ப்பது -‍ அ.முத்துலிங்க‌ம்

என்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்று வீட்டில்  இருக்கிறது.வீட்டுக்கு செல்லும் போது எப்போதாவது அதை பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தில் இருக்கும் முகத்துடன் கண்ணாடியில் என்னை பார்த்ததாக நியாபகமே இல்லை. அந்த புகைப்படத்தை எடுக்கும் போதெல்லாம் அம்மா பழைய கதைகள் எதாவது ஒன்றை சொல்லதொடங்குவாள். புகைப்படத்தில் நான் போட்டிருக்கும் பச்சை உடை, போட்டோ பிடித்த‌ நாள், அன்று காலையில் நடந்தது என்று நினைவில் உள்ள‌வைக‌ளை அடுக்கதொடங்குவாள். அவளை தவிர வேறு யாராலும் என்னுடைய சிறுவயது நினைவுகளை இத்தனை லயத்துடன் சொல்ல முடியாது.  கதைக‌ளை கேட்ப‌த‌ற்கு அப்பாவிற்கு ஆசை இருந்தாலும் நேர‌டியாக‌ க‌வ‌னிக்காம‌ல் காதை ம‌ட்டும் இங்கே வைத்துக்கொண்டு  வேறு வேலையில் மும்ம‌ராமாக‌ இருந்துகொண்டிருப்பார்.

புகைப்படம் எடுத்த‌ நாள் எவ‌வ‌ள‌வு முய‌ன்றும் நினைவிற்கு கொண்டுவ‌ர‌ முடிய‌வில்லை. சிறுவ‌ய‌து நினைவுக‌ளை போல‌ இப்போது இருக்கும் நினைவுக‌ளையும் பின்பு ஒரு நாளில் ம‌றந்து போவோம் என்ப‌து வேத‌னை த‌ருவ‌தாய் இருந்த‌து.

புகைப்படங்க‌ள் எப்போதுமே இற‌ந்த‌ கால‌த்தை நினைவுப‌டுத்திக்கொண்டிருக்கும் நினைவின் பிம்ப‌ம். கடந்த காலத்தை திரும்பி பார்க்க புகைப்படத்தை தவிற வேறு ஒன்றும் சிறந்தவையாக இருக்க முடியாது. புகைப்ப‌ட‌த்தை பார்க்கையில் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலை, அதன் சார்பு நிகழ்வுகளை மீட்டு தரும் அது த‌ரும் சுக‌மே கதகதப்பானது. அத‌ற்காக‌த்தான் ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ளை புகைப்ப‌ட‌த்திற்குள் அடைத்துக்கொள்வ‌தில் பெரும‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். தேர்ந்த‌ புகைப்ப‌ட‌க‌லைஞ‌னின் க‌ண்க‌ள் வ‌ழியே அவ‌ன‌து உல‌கை பார்ப்ப‌து வாழ்வின் உன்ன‌த‌மான‌ த‌ருண‌ம்.

ப‌க‌த்,கார்த்தி வ‌லைப‌க்க‌த்திலும் முக‌ப்புப‌க்க‌த்திலும் இவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் பெருத்த‌ வ‌ர‌வேற்பை பெற்ற‌து. ப‌க‌த்தை ச‌ந்திக்க‌ முடியுமா என்று மும்பையில் இருந்த போதே கேட்டிருந்தேன். சென்னை வ‌ந்த‌தும் ச‌ந்திக்கலாம் என்றிருந்தார். சென்னை வந்து புது அலுவலகம், புது முகங்கள் என  என்னை சமநிலை படுத்திக்கொள்ளவே இரண்டு வாரங்கள் ஆனது. அலுவ‌ல‌க‌த்தின் வெளியே தேநீர் குடித்துக்கொண்டுருந்தேன். அருகில் ப‌க‌த், அப்போது தான் முத‌ல்முறை நேரில் ச‌ந்திக்கிறோம்.  மிக‌ இய‌ல்பாக‌ இருந்தார். என‌க்கு நிறைய‌ கேள்விக‌ள் இருந்த‌ன‌ அவ‌ரிட‌ம். வீட்டிற்கு போய் பேசலாம் என்று கூட்டிச்சென்றார்.

அழ‌கிய‌ பூக்க‌ள்,வித விதமான புகைப்ப‌ட‌ க‌ருவி, பெரிய‌ வெள்ளை திரை என‌ வீடு அழ‌காயிருந்த‌து. பேச‌த்தொட‌ங்கினேன். குடும்ப‌ம், ப‌டிப்பு, வேலை என‌ போய்க்கொண்டிருந்த‌து. ம‌க்கா ஸ்டுடியோஸின் ஆரம்ப‌ தூண்க‌ள், கார்த்திக் உட‌னான‌ ந‌ட்பின் ஆர‌ம்ப‌கால‌ நாட்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார். பொறாமையாக இருந்தது. புகைப்ப‌ட‌த்தினுட‌னான‌ நெகிழ்ச்சி த‌ருண‌ங்க‌ளையும் ப‌திவு செய்தார். அவரின் புகைப்படங்கள்  நாளிதழ்கள், தினசரிகள், வலைபக்கங்களில் என எங்கும் வியாபித்திருக்கிறது.  அவரின் சில புகைப்படங்களை தருகிறேன். வலிகளை கடந்து தான் எந்த ஒரு கலைஞனும் கலையுடன் தன்னை இணைத்துக்கொள்கிறான். புகைப்படம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சி, முதலீடு, காலம் என அனைத்தையும் பட்டியலிட்டார்.

பக‌த் அமெரிக்கா, இந்தியா என‌ பல தேசங்களில் பல‌ புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ர்க‌ளை ச‌ந்தித்துள்ளார். நுண்ணிய வேலைப்பாடுகள் தான் புகைப்படம். ஒவ்வொரு புகைப்படமும் அதை எடுப்பவரின் மனநிலை சார்ந்தே உருவாக்கம் பெருகின்றன. என்னை க‌வ‌ர்ந்த‌ ப‌க‌த் , கார்த்தியின் சில‌ புடைப்ப‌ட‌ங்க‌ளை இங்கு ப‌கிர்கிறேன்.

எந்த ஒரு கலைஞனும் கலையின் வழி தான் தன் சக மனிதனிடம் அதிகமாக பேசிக்கொள்கிறான் என்பதை பகத், கார்த்தியின் படங்கள் நிறுபிக்கின்றன

 

( மேலே உள்ள கவிதையும் புகைப்படமும் எத்தனை இயல்பாய் இணக்கம் கொள்கிறது)

மனிதன் தன் முகத்தை கண்ணாடி , புகைப்படம் என இரண்டில் மட்டும் தான் நுட்பங்களுடன் பார்த்துக்கொள்கிறான்.

புகைப்ப‌ட‌த்தின் வ‌ழியே காணும் ம‌னித‌ர்க‌ள் அழ‌கான‌வ‌ர்க‌ள். ம‌னிதர்க‌ளிட‌ம் காணும் எந்த‌ கெட்ட‌ குண‌ங்க‌ளும் அவர்களுக்கு இல்லை. ம‌னிதனுக்கு புகைப்ப‌ட‌ம் மிக நெருக்க‌மான‌து. அத‌னால் தான் அதை எரிப்ப‌து நிராக‌ரிப்பின் உச்ச‌ம் என‌ நினைக்கிறான்.

மக்கா ஸ்டுடியோஸ் வலைபக்கம் : http://www.makkastudios.in/
முக நூலில் மக்கா ஸ்டுடியோஸ் :  http://www.facebook.com/makkastudios

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

 

பால்ய வயது நியாபங்கள் எப்போதுமே மனதை லயிப்பிற்குள்ளாக்குபவை. நகரத்தின் இத்தனை சுகங்களை அனுபவித்து விட்டாலும் கிராமம் இன்னும்  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீதம்பட்டி. அங்கே நடக்கும் கோயில் திருவிழா பிரசித்தமானது. திருவிழாவின் போது நடத்தும் தெருக்கூத்து, நாட்டியம் இவைகளுக்காகவே திருவிழா சென்ற நாட்கள் அவை.

இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய நடக்கும், புழுதி படிந்த கால்களுடன் அவர்கள் ஆடிய நடனமும், வண்ண விளக்குகளால் நிறைந்த அந்த மைதானமும் இன்னமும் கண்முன்னாடியே இருக்கிறது. பள்ளி தோழிகளை பள்ளியை தவிர வெளியே காண்பது திருவிழாக்களில்  மட்டும் தான்.இரவில் ஒளிரும் பல்பு வெளிச்சத்தில் அவர்கள் காட்டும் நமுட்டுச்சிரிப்பு அத்தனை வசீகரமானது.

இரவு முழுக்க கூத்து,கரகாட்டம் என‌ பாத்துவிட்டு நடந்தே ஊர் வந்து சேருவோம். அங்கு நடனம் ஆடிய பெண்கள் தான் எங்களை பொருத்தவரை ஆகச்சிறந்த அழகு .  அதில் நடனமாடிய ஒருவரை மையில்கல் என்ற ஊரில் ஐந்து வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். எங்கள் கிராமம், கோயிலின் பெயர், அமைப்பு என அனைத்தையும் சொல்லி நியாபகப்படித்தினேன்.

மிக சந்தோஷத்துடன் டீ குடிக்கிறயா என்றார். அவரால் என்னை நம்பவே முடியவில்லை உண்மையிலேயே தன்னை அடையாளம் தெரிந்ததா என்றார். தான் எப்படி ஆடினேன், எல்லோரும் என்ன சொன்னார்கள் என கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் ஆடியது ஐந்து வருடத்திற்கு முன்பு, சிலவற்றை மட்டுமே என்னால் நியாபகப்படுத்த முடிந்தது. வேட்டியில் வைத்திருந்த ஒரு கசங்கிய பத்து ருபாய் நோட்டை டீகாரனிடம் கொடுத்தார். தலையை குனிந்து கொண்டு நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். நான் அவரின் உதடுகளையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அவைகள் ஏதோ முணுமுணுத்தபடி இருந்தன‌. சிறிது நேரம் கழித்து இப்போதெல்லாம் கூத்திற்கு யாரும் கூப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டார். “கிருஷ்ணா காலேஜ் கட்டறாங்கல்ல அங்க தான் வேலைக்கு இருக்க” என்றார்.சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், என்னிடம் எதுமே சொல்லிக்கொள்ளாமல் வீதியில் இறங்கி நடந்து போய்விட்டார்.

கூடு தமிழ்ஸ்டுடியோ  நடத்திய பெளர்ணமி இரவு நிகழ்ச்சியில் நேற்றிரவு கலந்து கொண்டேன்.  அமைதியான மொட்டை மாடி, நடுவில் புல் தரை சுற்றிலும் பூக்கள் செடிகள் என அழகாக இருந்தது. பவா செல்லத்துரை எழுதிய ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கதையை மையமாக வைத்து இயக்குனர்  கருணாவால் எடுக்கப்பட்ட குறும்படம் தான் இந்த ஏழுமலை ஜமா.

அவர் அன்று சொல்லிக்கொள்ளாமல் சென்றதன் வலியை இந்த குறும்படம் பார்த்த பின் தான் உணர்ந்தேன். சிறு வயதில் நான் பார்த்த கூத்து அதன் பின்னாடி எத்தனை மனிதர்கள் , எத்தனை வாழ்வியல் கூறுபாடுகள் இருந்திருக்கும் என நினைக்க வைத்தது.கூத்தும், கரகாட்டமும், புழுதி படிந்த  கால்கள் த‌ந்த சந்தோஷ மனநிலை அதன் பிறகு கிட்டவே இல்லை.

தெருக்கூத்து க‌லைஞ‌ர்க‌ளின் அகஉல‌க‌ம், வாழ‌விய‌ல்,ஆளுமை, வாழ‌க்கைமுறை ஆகியவைகளை பற்றிய ஒரு நுண்ணிய ஆவனம் இந்த “எழுமலை ஜமா” குறும்படம். சினிமா என்ற மாற்று ஊடகத்தால் தெருக்கூத்தின் அழிவையும் அதன் பின்னான கலைஞர்களின் வாழக்கையையும்  இந்த குறும்படம்  மிக தெளிவாக காட்சிப்படுத்துகிறது.

”தனக்தாஹ் தனக்தாஹ்”  என ஒரு பாடல் பின்னனியாக வந்து கொண்டே இருந்தது. மனதை என்னமோ செய்தது அதன் இசையும் அதன் பின்னான சொல்லப்படாத வலியும். ஆரம்ப காட்சியில் இருந்தே மிக இனக்காமன படத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்தேன். அதில் இடம்பெற்ற கூத்து எத்தனை நாட்கள் படமாக்க பட்டிருக்கும் என நினைத்துக்கொண்டேன். மிக நுண்ணியமாக காட்சியமைப்பு, பின்னனி இசை , கலைஞர்கள் என அத்தனையிலும் தமிழரின் ஆதிக்கலையை அழகாக காட்டியிருந்தார்கள்.

தெருக்கூத்து ஆடுபவர்களின் தலைவனை வாத்தியாரே என்று கூப்பிடுகிறார்கள். முதல் காட்சி வாத்தியார் பெங்களூர் ரயில் நிலையம் வருவதிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பின் அவர் வருவதற்கான காரணம்,  தெருக்கூத்தின் அழகு,நிராகரிக்கப்படுதலின் வலி என நுட்பமாக காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

ம‌ன‌திற்கு நெருக்க‌மான‌ ப‌டங்களை பார்க்கும் தருணங்கள் அழகானது. கூத்தும், அத‌ன் பின்னான‌ ந‌ம் வ‌ர‌லாறும், வாழ்க்கையையும் அழ‌காக‌ ப‌ட‌ம் பிடித்துள்ளார்க‌ள். வார்த்தைக‌ள‌ற்ற‌ உண‌ர்ச்சி வெளிப்பாடுக‌ளை காட்டும் போது அனைவரின் மத்தியிலும் க‌ண‌த்த‌ மெள‌ன‌ம் நில‌விய‌து.

நாற்பது நிமிடம் ஓடக்கூடிய இந்த படம் முடிவடைந்ததும் கலந்துரையாடல்.  ப‌ட‌த்தில் இருக்கும் குறைக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே நான் பேசுவேன் என‌ எழுந்த‌ ஒருவர் படத்தை பற்றி அதன் அழகுணர்ச்சி பற்றியும் சிலாகித்தார். குறைகளை கடந்து ரசிக்க வேண்டிய குறும்படம் இது.  தெருக்கூத்தினை ஆவனப்படுத்துவதில் இந்த குறும்படம் ஒரு முக்கிய இடத்தை பெரும். எந்த வித சலனமும் இல்லாமல் நூற்றாண்டின் கலையை  தொலைத்துவிட்டு அமைதியாக இருக்கிறோம் என்ற வலி இருந்துகொண்டே இருந்தது.

படத்தை பற்றி நான், பாத்தீமாபாபு, மற்றும் நான்கு நண்பர்கள் பேசினோம்.கலந்துரையாடலில் பாத்தீமா பாபு “ ஒரு நிமிடம் கூட  கண்ணை இமைக்க முடியாமல் கட்டிப்போட்ட படம்” என்றார். நான் படத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் பற்றி குறிப்பிட்டேன், பின்னாடி வந்த நண்பர் ஆவணப்படுத்தப்படுதலின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். அதன் பின் வந்தவர் உணர்ச்சிவயப்பட்டவராக கதையை பற்றி சொல்லி சென்றார்.

கலந்துரையாடல் முடிந்த பிற‌கு நிலாச்சோறு. பெளர்ணமி நிலாவை பார்த்துக்கொண்டே மொட்டைமாடியில் வட்டமாய் அமர்ந்து உணவருந்தினோம். நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். மனதிற்கு பிடித்த படம், மொட்டை மாடி,நெருக்கமான நண்பர்கள், உணவு, புல்தரை என‌ சென்னையின் இரவும் மிக அழகானதாக இருந்தது.

தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் வாசிக்க : http://www.thamizhstudio.com/shortfilm_guidance_fmd_12.php

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண: http://picasaweb.google.com/thamizhstudio/1219012011#

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அவள்

Posted: ஜனவரி 18, 2011 in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,
நூற்றாண்டின் வலியை
அனுபவித்துவிட்டாள்
அவள்

உதிர்வ‌த‌ற்கு த‌யாராய்
திர‌ண்டிருக்கிறது
வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி

சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌
நுழைகிறாள் தனி அறையில்

அவ‌ளின்
பேரிரைச்சல் க‌ண்டு
ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து
அமைதியின் க‌டைசி சொல்

நீரால் சூழ்ந்த வீடு
உடைவது கண்டு
வீறிட்டு அழுகிறாய்
நீ

வெளிச்ச‌ம் க‌ண்டால்
ந‌டுங்குகிற‌து உன்னுடல்

இனி
உன் த‌லை பிடித்திழுக்கும்
கைக‌ளை கொண்டு
மெல்ல‌ வெளியேற‌லாம்
நீ

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

ஐரின் பாப்பா

Posted: ஜனவரி 14, 2011 in irene
குறிச்சொற்கள்:, ,

தலையை
சாய்த்து சாய்த்து
கதை சொல்லுவாள்
ஐரின் பாப்பா
அவ‌ள் க‌தையில் வ‌ரும்
எல்லா வில‌ங்குக‌ளும்
பேசும் திற‌ன் கொண்ட‌வை
நரி புலியிடம் சொல்லியதாம்
புலியே புலியே என்னை
விட்டுவிடு
நான் பாவ‌ம்.
ஆமாம் நீ பாவம்
உன்னை நாளைக்கு
சாப்பிடுகிறேன் என
புலியும் போய்விட்டதாம்.
புலி எங்கே போனது
என்று ஒரு போதும் அவள்
சொல்வதில்லை
புலி மீண்டும்
எப்போதாவது வரலாம்
வராமலும் போகலாம்
அப்படியே வ‌ந்தாலும்
நாளை சாப்பிடுவ‌தாய்
சொன்ன‌ நரியை
மறந்தே போயிருக்கும் 

–0OO0–

லிவி என்ற பூனை
ஐரின் குட்டியின்
எல்லா க‌தைக‌ளிலும் வ‌ரும்
லிவி இல்லாம‌ல் அவ‌ளால்
க‌தைக‌ள் சொல்ல‌ முடியாது
என்னுடைய‌ எல்லா க‌தைக‌ளிலும்
லிவி பூனைக்குட்டி
க‌ண்டிப்பாக‌ இட‌ம் பெற‌ வேண்டும்
லிவி பூனைக்குட்டி அவ‌ளுக்கு
முறுக்கு வாங்கி த‌ரும்
வாக்கிங் கூட்டிச்செல்லும் என்றாள்
லிவி பூனைக்குட்டி
க‌த‌வின் பின்னாடி ஒளிந்திருப்ப‌தாக‌
சொல்லி க‌த‌வை திற‌க்க
“மியாவ்” என்ற‌ ச‌த்த‌த்துட‌ன்
வெளிவ‌ந்தார்
லிவி பூனைக்குட்டியாய்
மாறிப்போன‌ அவள்
தாத்தா

(இது சென்னை சங்கமத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

–0OO0–

குருவி என்றால் திவிலி
பொம்மை என்றால் மித்தி
முத்தம் என்றால் இத்துக்கோ
என‌ அவ‌ளில் உல‌க‌ம்
புதுவ‌கை சொற்க‌ளால்
நிர‌ம்பிய‌து
நான் யார் என்று கேட்டால்
டிட்ட‌ப்பா
என்று  சொல்லி
கண்சிமிட்டி குழையும் போது
தூக்கி முத்தமிடுவ‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை நான்
சொல்வதேயில்லை

–0OO0–

பேசும் குர‌ங்கு பொம்மையை
எப்போதும் கையில்
வைத்திருப்பாள்
ஐரின் பாப்பா.
அசிரிய‌ர் அடிக்கும் போது
அம்மா திட்டும் போது
என‌ எல்லா இர‌வுக‌ளிலும்
குர‌ங்கு பொம்மை
பேசிக்கொண்டே
இருக்கிற‌து அவ‌ளுட‌ன்
யாருக்கும் தெரியாம‌ல்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!